Skip to main content

செல்பேசித் தொழில்நுட்பங்கள்

 [மனோரமா 2006 தமிழ் இயர்புக்கில் வெளிவந்த ‘தகவல் தொடர்பின் புதிய பரிமாணங்கள்’ என்ற என் கட்டுரையின் முதல்பகுதி] 

 

அன்னத்தைத் தூது அனுப்பியதாய் இலக்கியம் சொல்கிறது. புறாவின் மூலம் செய்தி அனுப்பியதை வரலாறு கூறுகிறது. குதிரைவீரன் மடல் கொண்டுபோய் அஞ்சல் சேவையைத் தொடங்கிவைத்தான். அஞ்சல் சேவையை அரசு முறைப்படுத்திய காலகட்டத்திலிருந்தே, நவீனத் தகவல் தொடர்பு சாதனத்துக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றே வந்துள்ளது.

''மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள், உங்கள் உதவி எனக்குத் தேவை'' (Mr.Watson, come here, I want you) என்று தன் உதவியாளரிடம் முதல் உரையாடலை நிகழ்த்தி, அமெரிக்காவின் மாஸாசூசட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் 1876-ஆம் ஆண்டு, மார்ச்சு 10-ஆம் தேதி ''தொலைபேசியை'' உலகுக்கு அறிமுகப்படுத்தித் தொலைதொடர்புப் புரட்சிக்கு வித்திட்டார் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல். கடந்த 130 ஆண்டுகளில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் பல்வேறு திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளன. நாகரிக வாழ்வின் நடைமுறைத் தேவைகள் ஒருபுறம் உந்தித் தள்ள, மனிதனின் அறிவுக் கூர்மையும், ஆராய்ச்சி மனப்போக்கும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் புதிய புதிய பரிமாணங்களை வெளிக்கொணர்ந்தன.

காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதும், சைக்கிளில், பைக்கில் செல்லும்போதும், பேருந்தில், ரயிலில் பயணிக்கும்போதும் தொலைபேசியைக் கூடவே எடுத்துச் செல்கிறோம். பயணத்தின்போதே உறவினரோடு தொடர்புகொண்டு பேசுகிறோம். செல்லுமிடமெல்லாம் எடுத்துச்செல்ல முடிவதால் 'செல்பேசி' (Cellphone) என்று பெயர்சூட்டி விட்டோம். கையிலும், பையிலும் எடுத்துச் செல்ல முடிவதால் 'கைபேசி,' 'பைபேசி' என்று செல்லமாக அழைப்பவர்களும் உண்டு.

இன்றைக்குச் செல்பேசியில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்லுமிடங்களிலுள்ள நல்ல காட்சிகளை உடனே படம் பிடித்துக் கொள்ளலாம். அந்தக் காட்சிகளை உங்கள் நண்பரின் செல்பேசிக்கு அனுப்பி வைக்கலாம். செல்பேசியிலிருந்து இணையத்தைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களைப் பார்வையிடலாம். இன்னும்பல நம்பமுடியாத பல விந்தைகளை நிகழ்த்தவிருக்கும் செல்பேசித் தொழில்நுட்பம் பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. செல்பேசித் தொழில்நுட்ப வளர்ச்சியை தலைமுறைகளாகப் பிரித்துக் கூறுவதே அறிவியலார் வகுத்த மரபு. எண்ணுடன் தலைமுறை (Generation) என்ற சொல்லின் முதல் எழுத்தாகிய G-யைச் சேர்த்து, 1G, 2G, 3G, 4G எனத் தொழில்நுட்பங்களை வகைப்படுத்துகின்றனர். தொடக்க காலந்தொட்டு வளர்ந்து வந்த செல்பேசித் தொழில்நுட்பத் தலைமுறைகளை விரிவாகக் காண்போம்.

 முதல் தலைமுறை (1G)

1G தொழில்நுட்பத்துக்கு முந்தைய தொழில்நுட்பங்களை 0G. 0.5G என வகைப்படுத்துவதுண்டு. அவற்றை முதலில் அறிந்து கொள்வோம்.

0G: தற்போதைய நவீன செல்லுலர் தொலைபேசித் தொழில்நுட்பத்திற்கு முந்தைய தொடக்க காலத் தொழில்நுட்பத்தை இந்த வகையில் சேர்ப்பர். அக்கால நடமாடும் தொலைபேசிகள் கார்களிலும் டிரக்குகளிலும் பயன்படுத்தப்பட்டன. டிரான்ஸ்மிட்டரும் ரிசீவரும் சேர்ந்த டிரான்ஸ்ரிசீவர் சாதனம் கார்/டிரக்கின் பின்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்த கேட்கும்/பேசும் கருவி டிரைவரின் இருக்கை அருகில் இருக்கும்.

0.5G: இந்தத் தலைமுறையில் இரண்டு வகையான ரேடியோ தொலைபேசிகள் பயன்பாட்டில் இருந்தன:

(1) ஆட்டோடெல் (Autotel)

இத்தொலைபேசி, பாம் (PALM – Public Automated Land Mobile) என்றும் அழைக்கப்பட்டது. பின்னால் வந்த செல்லுலர் தொலைபேசி சேவைக்கு முன்னோடி எனலாம். இதில் குரல் தடம் அனலாக் சிக்னலையே பயன்படுத்தியது. அழைப்பைத் தொடங்கி வைத்தல், மணி அடித்தல், தடத்தை ஒதுக்குதல் ஆகிய மேற்பார்வைச் செய்திகள் டிஜிட்டல் சிக்னல்களாகும். இத்தொலைபேசித் தொழில்நுட்பத்தைச் 'செல்லுலர் தொழில்நுட்பம்' எனக் கூற இயலாது. இவை 35 வாட் உயர்சக்தி கொண்ட விஎச்எஃப் (VHF – Very High Frequency) அலைவரிசைத் தடங்களைப் பயன்படுத்திக் கொண்டது.

(2) ஆட்டோ ரேடியோ புகலின் (Auto Radio Puhelin – ARP)

ஃபின்லாந்தில் வணிக ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மொபைல் நெட்ஒர்க்காகும். 'கார் ரேடியோ ஃபோன்' என்பது இதன் ஆங்கிலப் பெயர். 1971 இல் தொடங்கப்பட்டது. 1978 இல் 140 தள நிலையங்களுடன் (Base Stations) முழு நாட்டையும் இணைப்பதாய் வளர்ச்சி பெற்றது. இத்தொழில்நுட்பம் 150MHZ அலைவரிசையில் இயங்கியது.. அனலாக் சிக்னலையே பயன்படுத்தியது. அலைபரப்பு மின்சக்தி 1 வாட் முதல் 5 வாட் வரை. முதலில் ஒருதிசைத் தகவல் பரிமாற்றமாகவே இருந்தது. ஒருவர் பேசி முடித்தபின் அடுத்தவர் பேச வேண்டும். பின்னாளில் இருதிசை கார்த் தொலைபேசிகள் வந்தன. மறையாக்கம் (encryption) கிடையாது. பிறர் ஒட்டுக் கேட்க முடியும். புவிப்பகுதி செல்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் அழைப்பு ஒப்படைப்பு (call handover) கிடையாது. ஒரு செல் பகுதியிலிருந்து அடுத்த செல்லுக்குள் நுழையும்போது அழைப்புத் துண்டிக்கப்படும். ஒரு செல்லின் பரப்பு 30 கி.மீ வரை இருக்கும். இதன் நடமாடும் முனையம் மிகப் பெரியது. செலவு மிக்கது. பின்னாளில் கையடக்கமான கருவிகள் வந்தன. அதற்குள் இத்தொழில்நுட்பம் மதிப்பிழந்துவிட்டது. 2000-ஆம் ஆண்டு ஏஆர்பீ நெட்ஒர்க் மூடப்பட்டது.

1G: முதல் தலைமுறை தொலைபேசித் தொழில்நுட்பங்கள் அனைத்தும் அனலாக் சிக்னலையே பயன்படுத்தின. ஏஆர்பீ தொழில்நுட்பத்தைப் பின்பற்றிப் பல்வேறு நாடுகளிலும் 1980களில் நடமாடும் ரேடியோ தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தரப்பாடுகள் (Standards) பின்பற்றப்பட்டன. ஏஆர்பீ தொழில்நுட்பத்திலிருந்து இவை அதிகமாக வேறுபடவில்லை. எனினும் தொலைபேசிக் கருவிகள் கையில் எடுத்துச் செல்லும் அளவுக்கு இருந்தன. முழு இருதிசைத் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. குறைந்த மின்சக்தியில் செயல்பட்டது.

 இரண்டாம் தலைமுறை (2G)

1G தொழில்நுட்பங்கள் தகவல் பரிமாற்றத்துக்கு அனலாக் சிக்னலையே பயன்படுத்தின. ஆனால் 2G தொழில்நுட்பம் டிஜிட்டல் சிக்னலைப் பயன்படுத்தியது. இதுவே 1G தொழில்நுட்பத்திலிருந்து 2G தொழில்நுட்பத்தை வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான கூறாகும். டிஜிட்டல் சிக்னல் என்பதால் குரலின் தரம் கூடியது. அனலாக் சிக்னலில் இருந்த சிக்னல் சிதைவு கிடையாது. ஒன்றுசேர்ப்பு (Multiplexing) எளிது என்பதால் அதிகமான பேச்சுத் தடங்களைப் பயன்படுத்த முடியும். ஆனால், 2G-இல் குரல் அழைப்புகளை மட்டுமே கையாள முடியும். டிஜிட்டல் டேட்டாவைக் (மின்னஞ்சல், ஏனைய மென்பொருள்களை) கையாள முடியாது. தேதி, நேரம் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ள முடியும். பின்வந்த சில தரப்பாடுகளில் குறுஞ்செய்திப் ((SMS) பரிமாற்றம் சாத்தியம். 2G சேவைகள் அமெரிக்காவில் பீசிஎஸ் (PCS- Personal Communication Service) என்று அறியப்படுகிறது.

2G தொழில்நுட்பங்களை இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்:

(1) டீடிஎம்ஏ (TDMA – Time Division Multiple Access)
(2) சிடிஎம்ஏ (CDMA – Code Division Multiple Access)

இவற்றின் அடிப்படையில் அமைந்த முதன்மையான 2G தரப்பாடுகள் சிலவற்றைக் காண்போம்.

• ஜிஎஸ்எம் (GSM - TDMA) - ஐரோப்பா மற்றும் பல நாடுகளில்
• ஐடென் (IDEN - TDMA) - அமெரிக்கா, கனடா
• ஐஎஸ்-136 (D-Amps - TDMA) - அமெரிக்கா (சுருக்கமாக டீடிஎம்ஏ)
• ஐஎஸ்-95 (CDMAOne - CDMA) - அமெரிக்கா (சுருக்கமாக சிடிஎம்ஏ)
• பீடிசி (PDC - TDMA) - ஜப்பானில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றுள் இந்தியாவில் டீடிஎம்ஏ அடிப்படையிலான ஜிஎஸ்எம், ஐஎஸ்-95 என அறியப்படும் சிடிஎம்ஏ ஆகிய இருவகைத் தொழில்நுட்பங்களுமே பயன்பாட்டில் உள்ளன. ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

ஜிஎஸ்எம் (GSM – Global System for Mobile)

செப்ட் (SEPT) என்னும் ஐரோப்பிய அமைப்பு 1980-களின் மத்தியில் இதனை உருவாக்கியது. ஐரோப்பா முழுவதும் ரோமிங் வசதியைப் பயனர்களுக்கு ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் இதன் தரப்பாடு உருவாக்கப்பட்டது.

ஒரு நாடு அலலது நகரம் பல்வேறு செல்களாகப் பிரக்கப்படும் ஒவ்வொரு செல்லிலும் தகவல் பரிமாற்றத்துக்கான அலைபரப்பியும் (Transmitter), அலைவாங்கியும் (Receiver) இணைந்த பரப்பிவாங்கி (Transreceiver) கொண்ட ஒரு தளப் பரப்பிவாங்கி நிலையம் (Base Transreceiver Station - BTS) இருக்கும். பல பிடீஎஸ்-கள் ஒரு தளக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் (Base Station Controller - BTS) இணைக்கப்பட்டிருக்கும். நகரத்திலுள்ள பல பிஎஸ்சி-கள் ஒரு நடமாடும் தொடர்பக மையத்துடன் (Mobile Switching Ceter – MSC) இணைக்கப்பட்டிருக்கும். எம்எஸ்சி, மறுமுனையில் நிலைபேசிப் பிணைய (Landline Network) அமைப்பு உட்படப் பிற செல்பேசிப் பிணைய அமைப்புகளுடன் பிணைக்கப்பட்டிருக்கும். ஒரு நெட்ஒர்க்கில் ஒன்றுக்கு மேற்பட்ட எம்எஸ்சி-கள் இருக்க முடியும். இந்த இணைப்புகள் அனைத்தும் ஒளியிழைக் கேபிள்களால் ஆனவை.

பயனரின் கையில் செல்பேசி இருக்கும். அதில் சந்தாதாரர் அடையாளக் கருவி (Subscriber Identity Module) என்னும் சிம் (SIM) கார்டு பொருத்தப்பட்டிருக்கும். அதில் பயனரைப் பற்றிய தகவல்களும் டிஜிட்டல் முறையில் பதியப்பட்டிருக்கும். பயனருக்கு அளிக்கப்படும் எண் 'சிம்' கார்டுக்கு உரியது. செல்பேசிச் சாதனத்துக்கு அல்ல. இதன் பொருள் ஒரு சேவையாளரிடம் வாங்கிய 'சிம்' கார்டைத் தூக்கியெறிந்துவிட்டு வேறொரு சேவையாளரின் சிம் கார்டைச் செருகிச் செல்பேசியைப் பயன்படுத்தலாம்.

செல்பேசி இயக்கப்பட்டுள்ள நிலையில் பிடீஎஸ் அதன் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டே இருக்கும். அத்தகவலை பிஎஸ்சி வழியாக எம்எஸ்சி-க்கு அனுப்பும். செல்பேசி வைத்துள்ளவர் எந்த செல்லில் உள்ளார். பயணிக்கும்போது எந்த செல்லுக்குள் நுழைகிறார் என்ற தகவலை எம்எஸ்சி புதுப்பித்துக்கொண்டே இருக்கும். செல்பேசியில் பேசிக்கொண்டே ஒரு செல்லிலிருந்து இன்னொரு செல்லுக்குள் நுழையும்போது உரையாடல் துண்டிக்கப்படாமல் தொடர்வதற்கு இத்தகவல் பயன்படுகிறது.

அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் அலைவரிசை முறையே 880-915 925-960 MHZ ஆகும். 175 அழைப்புத் தடங்கள் (Channels) இருக்க முடியும். தட அலைக்கற்றை (Channel Bandwith) 200 KHZ. சேனலின் தகவல் பரிமாற்ற வேகம் 270.833 Kbps.

இந்தியா உட்பட 90 நாடுகளுக்கு மேல் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே சர்வதேச ரோமிங் எளிது.

சிடிஎம்ஏ (CDMA – Code Division Multiple Access)

சிடிஎம்ஏவின் தொடக்கம் அமெரிக்க ராணுவத்துறை என்றே கூற வேண்டும். இரண்டாம் உலகப்போரை ஒட்டிப் பயன்படுத்தப்பட்ட ஒரு தொழில்நுட்பமே (frequency hopping) இதன் மூலக்கரு. 1980-களின் மத்தியில் அமெரிக்க ராணுவம், பரவு-அலைக்கற்றை (Spread-Spectrum) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இதுவே சிடிஎம்ஏ-வின் முன்னோடி. பின்னாளில் சிடிஎம்ஏ தொழில்நுட்பத்துக்கு குவால்காம் நிறுவனம் உரிமம் பெற்றது. இத்தொழில்நுட்பத்துக்கு ஐஎஸ்-95 மற்றும் சிடிஎம்ஏஒன் போன்ற பிற பெயர்களும் உண்டு.

சிடிஎம்ஏவில் பயன்படுத்தப்படும் அலைவரிசை 824-849 MHZ (அனுப்புதல்) 869-894 MHZ (பெறுதல்). சேனல்களின் எண்ணிக்கை 20. சேனல் பேண்டுவித் 1250 MHZ. தகவல் பரிமாற்ற வீதம் 1.2288 Mbps.

தளநிலையம், தொடர்பக மையம் (BTS, MSC) போன்ற செயல்பாட்டுக் கட்டமைப்புகள் ஜிஎஸ்எம்மில் இருப்பதைப் போன்றதே. ஆனால் ஜிஎஸ்எம்மில் இருப்பது போன்று அலைக்கற்றை, சேனல்களாகப் பிரிக்கப்படுவது இல்லை. ஒரு செல்பேசி உரையாடலுக்கு முழுமையான அலைக்கற்றையும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. பிறகு எப்படி ஒன்றுக்கு மேற்பட்ட சேனல்களைப் பயன்படுத்த முடியும்? உரையாடல் சிறுசிறு தகவல் பாக்கெட்டுகளாகப் பிரிக்கப்பட்டு அந்த உரையாடலுக்குரிய ஒரு குறியீட்டு எண் இடப்படும். மறுமுனையில் பெறுநர் செல்பேசிக்கு அந்த எண்ணுள்ள பாக்கெட்டுகள் மட்டுமே சென்றுசேரும். குழப்பத்திற்கு இடமில்லை. இவ்வாறு முழு அலைக்கற்றையும் உரையாடல்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதே பரவு-அலைக்கற்றைத் (Spread Spectrum) தொழில்நுட்பம் எனப்படுகிறது.

சிடிஎம்ஏ தொழில்நுட்பம் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தைவிடப் பலவகையில் மேம்பட்டது. அவற்றுள் சில:

• குரல் தரம் அதிகம், இரைச்சல் சிறிதும் இருக்காது.

• பயனர் பேசிக்கொண்டே செல்விட்டு செல் போகும்போது மென்மையான ஒப்படைப்பு (Soft handover) நடைபெறுவதால் அழைப்புத் துண்டிப்பு குறைவு. ஒப்படைப்பு நேரத்தில் இரண்டு செல்களின் தள நிலைய சிக்னல்களும் கிடைக்கும். வலுவுள்ள சிக்னல், அழைப்பை எடுத்துக் கொள்ளும்.

• பிற தொழில்நுட்பங்களைவிட சிடிஎம்ஏ-வில் ஒரு தள நிலையம் அதிகப் பரப்புக்கு வியாபிக்கும். ஒரு குறிப்பிட்ட நகர்ப்பரப்பில் ஜிஎஸ்எம் மொபைலுக்கு 200 பிடீஎஸ்கள் தேவைப்படும் எனில் சிடிஎம்ஏ-வில் 40 போதும். இதனால் செலவு குறையும். பராமரிப்பு மேம்படும்.

• கட்டடங்களில் சிறந்த ஊடுருவல் இருக்கும்.

• சிடிஎம்ஏ செல்பேசிக்குக் குறைந்த மின்சக்தியே தேவை. பேட்டரி அதிக நாட்களுக்கு வரும். சிறிய பேட்டரி போதும். செல்பேசியின் அளவு சிறியதாகும். எடையும் குறையும்.

• 4.4 டிரில்லியனுக்கு மேற்பட்ட குறிமுறை எண்கள் உள்ளன. எனவே சிறந்த தனிஒதுக்கத்தையும் (Privacy). பாதுகாப்பையும் (Secruity) வழங்க முடியும்.

சிடிஎம்ஏ-வில் 'சிம்' கார்டு கிடையாது. செல்பேசிக் கருவியிலேயே எண் பொறிக்கப்பட்டு விடுகிறது. ஒரு சேவையாளரிடம் செல்பேசியுடன் சேர்ந்தே சேவையைப் பெற முடியும். ஒரு சேவையாளரிடம் பெற்ற செல்பேசியை வேறு சேவையாளரிடம் பயன்படுத்த முடியாது. சிம் கார்டு இல்லையென்பதால், நடமாடும் வணிகம் (M-Commerce) போன்ற பயன்பாடுகளை சிடிஎம்ஏ-வில் நடைமுறைப்படுத்துவது கடினம்.

2G தொழில்நுட்பத்திலிருந்து 3G தொழில்நுட்பத்திற்கு மாறிச் செல்கின்ற இடைநிலைக் கட்டம் இரண்டு படிநிலைகளைக் கொண்டது. அவற்றை எளிமை கருதி 2.5G மற்றும் 2.75G என வகைப்படுத்தலாம். மற்றபடி 2.5G, 2.75G என்பவை, தரப்பாட்டு அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட வகைப்பாடுகள் அல்ல.

2G-யிலிருந்து 2.5G-க்குத் தாவிச்செல்லும் கட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது தொடர்பாக்க முறை (Switching Method) ஆகும். 2G வரையில் தகவல் பரிமாற்றம் சுற்றுகைத் தொடர்பாக்க (Circuit Switching) முறையிலேயே நடைபெற்று வந்தது. 3G-யில் பொட்டலத் தொடர்பாக்கம் (Pocket Switching) பயன்படுத்தப்படுகிறது. 2G - 3G இரண்டுக்கும் இடைப்பட்ட தலைமுறையில் சர்க்யூட் சுவிட்சிங் முறையோடு சேர்த்துப் பாக்கெட் தொடர்பாக்க முறையும் செயல்படுத்தப்பட்டதால் 2.5G என்று அழைப்பது பொருத்தமே. பாக்கெட் சுவிட்சிங் முறை 3G-யின் பலன்கள் பலவற்றை நல்கும் எனினும், 3G சேவை அளவிற்கு வேகம் போதாது என்பதால் இவற்றை 2.5 அல்லது 2.75 என வரையறுப்பதே சரி.

2.5G: இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய இரண்டு தொழில்நுட்பங்கள்:

1. ஜிபீஆர்எஸ் (GPRS - General Packet Radio Service)
2. ஹெச்எஸ்சிஎஸ்டி (HSCSD – High Speed Circuit Switched Data)

ஜிபீஆர்எஸ் (GPRS)

இணையத்தை அணுகுவதற்கு வழி‏செய்யும் டீசிபீ/ஐபீ புரொட்டக்கால்கள் பாக்கெட் சுவிட்சிங்கை அடிப்படையாகக் கொண்டவை. சர்க்யூட் சுவிட்சிங் முறையில் அமைந்த 2G - ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஜிபீஆர்எஸ். செல்பேசியிலிருந்து இணையத்தை அணுகி அதன் சேவைகளை நுகர ஜிபீஆர்எஸ் வழிவகுக்கிறது. இதன் டேட்டா பரிமாற்ற வேகம் கருத்தியல் வரம்பு 171.2 Kbps எனினும் நடைமுறையில் 30-70 Kbps வரைதான் எட்ட முடியும். இந்த வேகம் நிலைத் தொலைதொடர்பு நெட்ஒர்க்கில் உள்ள வேகத்தைப்போல் மூன்று மடங்கு அதிகம். ஜிஎஸ்எம் சர்க்யூட் சுவிட்சிங் நெட்ஒர்க்கில் உள்ள வேகத்தைவிடப் பத்துமடங்கு அதிகம். எனினும் தள நிலையத்திலிருந்து பயனர் அதிக தொலைவில் இருப்பின் இணைப்பு வேகம் குறையும். மக்கள் பெருக்கம் மிகுந்த நகரங்களில் இது பெரிய குறைபாடில்லை.

ஜிபீஆர்எஸ்ஸின் மிகப்பெரும் பயன், பயனர்கள் நெட்ஒர்க்கில் எப்போதும் இணைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இணைக்கப்பட்டுள்ள நேரத்துக்கு அவர்கள் பணம் செலுத்தத் தேவை இல்லை. டேட்டா பரிமாற்ற அளவுக்கான பணம்மட்டும் செலுத்தினால் போதும். முந்தைய தொழில்நுட்பங்களில், குறிப்பிட்ட நேரம்வரை, ஒரு மொபைல் பயனருக்கென ஒரு ரேடியோ சேனல் ஒதுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், ஜிபீஆர்எஸ்ஸில் ஒரே அலைக்கற்றையை (ரேடியோ சேனலை) நிறையப் பயனர்கள் பகிர்ந்து கொள்ள முடியும். இணையச் சேவைகளான இணைய உலா (Browsing), மின்னஞ்சல் (E-mail), உடனடிச் செய்திப் பரிமாற்றம் (Instant Messaging) ஆகியவற்றுக்கு இப்பண்பியல்பு மிகவும் ஏற்றது. மின்னஞ்சல் வரும்போதே அறியமுடியும். செல்பேசிச் சேவையாளர்கள் மற்றும் இணையச் சேவையாளர்களின் சங்கமத்துக்கு ஜிபீஆர்எஸ் வழிவகுக்கிறது.

அடிப்படையில் ஜிபீஆர்எஸ், ஜிஎஸ்எம் நெட்ஒர்க்குகளுக்காக வடிவமைக்கப்பட்ட போதிலும் வட/தென் அமெரிக்காவில் செயல்படும் சிடிஎம்ஏ நெட்ஒர்க்குகளில் பயன்படுத்தப்படும் ஐஎஸ்-136 டீடிஎம்ஏ தரப்பாடு, ஜிபீஆர்எஸ் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக் கொள்கிறது. மொபைல் தொழில்நுட்பத்தை 3G-க்கு இட்டுச் செல்ல ஜிபீஆர்எஸ் ஓர் இடைநிலைக் கட்டம் என்பதை ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ ஆகிய இரண்டு நெட்ஒர்க்குகளின் தொழில்துறை சங்கங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஹச்எஸ்சிஎஸ்டி (HSCSD)

ஜிஎஸ்எம் நெட்ஒர்க்குகளில் சர்க்யூட் சுவிட்சிங் முறையின் புதிய பரிமாணம் இது. ஜிஎஸ்எம் இணைப்பில் 57.6 Kbps வேகத் தகவல் பரிமாற்றத்துக்கு இத்தொழில்நுட்பம் வழிவகுக்கிறது. ஜிஎஸ்எம் வரையறுப்புகளின் திட்டமிட்ட பரிணாம வளர்ச்சியில் இது ஒரு படிநிலை ஆகும். ஜிபீஆர்எஸ் (பாக்கெட் சுவிட்சிங் முறை), தொடர்ச்சியாக இல்லாமல் அவ்வப்போது டேட்டா பரிமாற்றம் நடைபெறுகின்ற வலைஉலா, மின்னஞ்சல், உடனடிச் செய்தி போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்றது எனில், ஹச்எஸ்சிஎஸ்டி (சர்க்கியூட் சுவிட்சிங் முறை), நிகழ்படக் கலந்துரையாடல் (Video Conferencing) பல்லூடகச் செய்திச்சேவை (Multimedia Messaging Service- MMS) போன்ற பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றது. ஜிபீஆர்எஸ்ஸை இதனுடன் சேர்த்துச் செயல்படுத்த முடியும். ஆனால் ஹெச்எஸ்சிஎஸ்டி செயல்படுத்தப்படும் நெட்ஒர்க்குகளில் ஜிபீஆர்எஸ்ஸுக்கு மூன்றாம் இடம்தான். குரல் சேவைக்கு முதலிடம். அதிவேக டேட்டா சேவைக்கு ((HSCSD) இரண்டாம் இடம். ஹெச்எஸ்சிஎஸ்டி எந்த வகையிலும் குரல் சேவையைப் பாதிக்காது. ஆனால் ஜிபீஆர்எஸ் சேவையைப் பாதிக்கும்.

ஜிபீஆர்எஸ், பிற பாக்கெட் அடிப்படையிலான நெட்ஒர்க்குகளுடன் (எ-டு: இணையம்) ஒத்தியைந்து செயல்பட ஏற்றது. அதே வேளையில் ஹெஹச்எஸ்சிஎஸ்டி, பிற சர்க்கியூட் அடிப்படையிலான தகவல் தொடர்பு நெட்ஒர்க்குகளுடன் (பொதுத் தொலைபேசி மற்றும் ஐஎஸ்டிஎன் சேவைகள்) ஒத்தியைந்து செயல்பட வல்லது. எனினும் ஜிபீஆர்எஸ்ஸுக்கு இருக்கும் அளவுக்கு இத்தொழில்நுட்பத்துக்கு அதிக வரவேற்பில்லை என்றே கூற வேண்டும். நோக்கியா நிறுவனம் மட்டுமே ஆதரித்தது. எனினும் அதிகச் செல்வாக்குப் பெறவில்லை.

2.75G: எட்ஜ் (EDGE – Enhance Data rate for Global Evolution): ஜிஎஸ்எம் நெட்ஒர்க்குகளை 3G தலைமுறைக்கு இட்டுச் செல்வதற்கு அடுத்த படிக்கட்டாக விளங்குவது எட்ஜ் (EDGE) தொழில்நுட்பம் ஆகும். இதனை 2.75G என வகைப்படுத்துகின்றனர். இருக்கும் நெட்ஒர்க் கட்டமைப்பில் எவ்வித மேம்பாடும் செய்யாமலேயே இத்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த முடியும் என்பதே இதன் சிறப்புக் கூறு. 3G தொழில்நுட்பமான யுஎம்டீஎஸ்-க்கு நேரடியாக மாற முடியாத மொபைல் சேவையாளர்களுக்கு எட்ஜ் தொழில்நுட்பம் ஒரு சிறந்த மாற்றாகும். இருக்கின்ற ஜிஎஸ்எம்மின் 200 MHZ அலைக்கற்றையிலேயே 384 Kbps வேகத் தகவல் பரிமாற்றம் சாத்தியம் என்பது இதன் சிறப்புக் கூறாகும். இது, ஜிபீஆர்எஸ் சேவையின் அதிவேக வடிவம் என்பதால் இதனை இஜிபீஆர்எஸ் (Enchanced GPRS) என்றும் அழைப்பர். ஜிபீஆர்எஸ்ஸில் பெறப்படும் அனைத்து சேவைகளும் அதிக வேகத்தில் எட்ஜில் கிடைக்கும்.

ஜிபீஆர்எஸ்ஸில் இயலாத வீடியோ மற்றும் மல்ட்டிமீடியா பயன்பாடுகளுக்கு எட்ஜ் உகந்தது. எட்ஜில் தகவல் பரிமாற்றத்தின்போது இணைப்பின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சேனலில் தரத்துக்கு ஒவ்வாத அளவுக்கு அதிக தரவுப் பரிமாற்ற வீதம் (Data Transfer Rate) இருந்து விடக்கூடாதல்லவா? இந்தக் கண்காணிப்பு முறைக்கு தொடுப்புத் தரக் கட்டுப்பாட்டு முறைமை (Link Quality Control System) என்று பெயர். குறுக்கீடுகள் குறைவாக இருக்கும்போதும், தள நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும்போதும் டேட்டா பரிமாற்ற வீதம் அதிகமாக இருக்கும்.

எட்ஜ் தொழில்நுட்பம் தொடக்கத்தில் வட அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2003-ஆம் ஆண்டில் உலகமெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், வேறு எங்கேயும்விட வடஅமெரிக்காவில் இதற்கு வரவேற்பு அதிகம். பிற நாடுகளில் உள்ள சேவையாளர்கள் ஒன்று, எட்ஜைத் தவிர்த்துவிட்டு நேரடியாக 3G தொழில்நுட்பமான யுஎம்டீஎஸ்ஸுக்குத் தாவிவிட எண்ணுகின்றனர். அல்லது யுஎம்டீஎஸ் பரவாத இடங்களில் மட்டும் எட்ஜைப் பயன்படுத்த எண்ணுகின்றனர். இத்தொழில்நுட்பம், ஐடீயு (ITU- International Telecom Union) வரையறுத்துள்ள 3G தரப்பாட்டை எட்டியுள்ளதால் எட்ஜ் தொழில்நுட்பம் 3G என மதிப்பிடத் தகுதியுள்ளது. எனக் கூறுவாரும் உளர்.

 மூன்றாம் தலைமுறை (3G)

2G நெட்ஒர்க்குகளில் பல குறைபாடுகள் இருந்தன. பல்வேறுபட்ட தரப்பாடுகள் பயன்பாட்டில் இருந்தன. குறைவான டேட்டா பரிமாற்ற வீதமே எட்ட முடிந்தது. பொதுவான அலைக்கற்றை இல்லை. இக்குறைபாடுகளைக் களைந்து உலக முழுமைக்கும் ஒரே மாதிரியான 3G நெட்ஒர்க்குகளை அமைப்பதற்கான ஆலோசனையாக, 1992-ஆம் ஆண்டு சர்வதேச தொலைதொடர்புக் கூட்டமைப்பு (International Telecom Union -ITU), இன்டர்நேஷனல் மொபைல் டெலிகம்யூனிகேஷன்-2000 (ITM-2000) என்னும் மொபைல் நெட் ஒர்க்குக்குகளுக்கான ஒரு பொதுவான தரப்பாட்டினை (Standard) உருவாக்கியது. இப்பெயரில் இருக்கும் 2000 என்ற எண், (1) இத்தரப்பாடு நடைமுறைக்கு வரும் ஆண்டு (2) பயன்படுத்தவிருக்கும் அலைவரிசை (MHZ) (3) தகவல் பரிமாற்ற வேகம் (Kbps) ஆகிய மூன்றையும் குறிப்பதாகக் கொள்ளப்பட்டது. 3G-யைப் பொறுத்தவரை மேற்கண்ட மூன்றும் முழுமையாகச் செயல்படுத்தப் படவில்லை எனினும் பெயர் அப்படியே நிலைத்து விட்டது. தகவல் பரிமாற்ற வேகத்தைப் பொறுத்தவரை ஐஎம்டீ- 2000 வகுத்துள்ள வரையறை:

• வாகனத்தில் பயணிக்கும்போது 144 Kbps
• நடந்து செல்லும்போது 384 Kbps
• வீட்டுக்குள் இருக்கும்போது 2 Mbps

உலகம் முழுக்க ஒரே மாதிரியான தரப்பாட்டை நடைமுறைப்படுத்த ஐடீயு (ITU) திட்டமிட்ட போதும், சேவையை வழங்குபவர்கள் ஒத்த கருத்துக்கு வரமுடியவில்லை. அதற்கு முக்கியமான தடைக்கல்லாக இருப்பவை, இப்போது பல்வேறு தரப்பாடுகளில் அமைந்துள்ள 2G நெட்ஒர்க்குகளே. வெவ்வேறு தொழில்நுட்பங்களில் செயல்படுவோர் அனைவரும் உடனே ஒற்றைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதென்பது இயலாது. படிப்படியாகத்தான் 3G-க்கு மாற முடியும். வருகின்ற புதிய தொழில்நுட்பம் தற்போதுள்ள தத்தமது தொழில்நுட்பத்துக்கு ஒத்திசைவானதாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் கருதுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, ஐடீயு, கீழ்க்காணும் ஐந்து தொழில்நுட்பங்களைப் பரிந்துரைத்தது.

• டபிள்யூ-சிடிஎம்ஏ (W-CDMA)
• சிடிஎம்ஏ2000 (CDMA2000)
• யுடீஆர்ஏ-டீடிடி (UTRA-TDD)
• யுடபிள்யூசி-136 (UWC-136)
• டெக்ட் (DECT)

806-960 MHZ, 1710- 1885 MHZ / 2500 - 2960 MHZ, 1885-2025 MHZ /2110-2200 MHZ ஆகிய அலைக்கற்றைகளை 3G-க்கென ஒதுக்கியுள்ளது. மேற்கண்ட ஐந்துவகைத் தொழில்நுட்பங்களில் முதலிரண்டைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

டபிள்யூ-சிடிஎம்ஏ / யுஎம்டீஎஸ் (W-CDMA / UMTS)

டபிள்யூ-சிடிஎம்ஏ என்பது விரிகற்றை சிடிஎம்ஏ (Wideband CDMA) என்பதைக் குறிக்கிறது. பெயரில் சிடிஎம்ஏ என இருப்தால் இது சிடிஎம்ஏ நெட்ஒர்க்குகளுக்கு உரிய தொழில்நுட்பம் எனக் கருதிவிடக்கூடாது. முற்றிலும் ஜிஎஸ்எம் நெட்ஒர்க்குகளுக்கென உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். ஐரோப்பிய நாடுகள் முனைப்பாக இத்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

டிபிள்யூ-சிடிஎம்ஏ-வின் தரப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே யுஎம்டீஎஸ் (UMTS – Universal Mobile Telecommunication System) ஆகும். சில நிறுவனங்கள் (குறிப்பாக ஜப்பானில் FOMA) உருவாக்கியுள்ள டபிள்யூ-சிடிஎம்ஏ சேவை யுஎம்டீஎஸ் உடன் ஒத்தியைவாய் இருப்பதில்லை. எனினும் மிகவும் அடிப்படையான தொழில்நுட்பக் கூறுகள் யுஎம்டீஎஸ், டபிள்யூ-சிடிஎம்ஏ ஆகிய இரண்டுக்கும் பொதுவானவை. இனி யுடீஎம்எஸ்ஸின் முக்கிய பண்புக்கூறுகளைப் பார்ப்போம்.

• அனைத்து மொபைல் பயன்பாடுகளுக்கும் ஏற்றது
• சர்க்கியூட் சுவிட்சிங், பாக்கெட் சுவிட்சிங் இரண்டையும் ஏற்கும்
• தகவல் பரிமாற்ற வேகம் 2 Mbps. (நடைமுறையில் 1920 Kbps)
• அலைக்கற்றைச் செயல்திறன் (Spectrum efficiency) அதிகம்

மூன்றாம் தலைமுறை கூட்டாண்மைத் திட்டப்பணி (Third Generation Partnership Project – 3GPP) என்னும் அமைப்பு ஆண்டுதோறும் பல கட்டங்களாக யுஎம்டீஎஸ் தரப்பாடுகளை வெளியிட்டு வருகிறது. இருக்கின்ற ஜிஎஸ்எம் நெட்ஒர்க் அனைத்தையும் 3G-க்கு மாற்றுவதற்கான படிநிலை மேம்பாட்டுத் திட்டங்கள் இவை. ஜிபீஆர்எஸ்ஸின் அடுத்தகட்ட வளர்ச்சி யுஎம்டிஎஸ் எனக்கூறலாம்.

யுஎம்டீஎஸ் நெட்ஒர்க் வழங்கும் சேவைகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

(1) உரையாடல் வகை (Conversation): குரல் தொலைபேசி (Voice Phone), நிகழ்படத் தொலைபேசி (Video Phone), நிகழ்பட விளையாட்டு (Video Game).

(2) தாரை வகை (Streaming): பல்லூடகம்(Multimedia), கேட்பு நிகழ்படம்(Video on Demand), வலைபரப்பு (Webcast).

(3) ஊடாடல் வகை (Interactive): இணைய உலா (Internet Browsing), பிணைய விளையாட்டு (Internet Game), தரவுத்தள அணுகல் (Database Access).

(4) பின்புல வகை (Background): மின்னஞ்சல் (e-mail), குறுஞ்செய்தி (SMS), பதிவிறக்கம் (downloading)

மேற்கண்ட சேவைகளின் மூலமாக கிடைக்கும் பயன்கள் பலதரப்பட்டவை:

• நடமாடும் நிகழ்படக் கலந்துரையாடல் (Mobile Video Conferencing)
• நடமாடும் தொலைக்காட்சி / நிகழ்படம் (Mobile TV / Video)
• நிகழ்படத் தொலைபேசி (Video Phone)
• நிகழ்பட வினியோகம் Video Delivery)
• மேம்பட்ட கார் வழிச்செலுத்துகை (Car Navigation)
• சேய்மை மருத்துவ நோய் ஆய்வு (Telemedicine diagonastics)
• நடமாடும் வணிகம் (Mobile Commerce)

டபிள்யூ-சிடிஎம்ஏ அல்லது யுஎம்டீஎஸ் பல்வேறு நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளது. ஜப்பானில் 2001-லிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஜப்பான் 2005 தொடக்கத்திலேயே முற்றிலுமாக 3G-க்கு மாறிவிட்டது. 2006-ல் 3.5-க்கு மாறப்போகிறது. 2004-இல் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் யுஎம்டீஎஸ் நெட்ஒர்க்குகள் நிறுவப்பட்டுவிட்டன. 2004-ஆம் ஆண்டின் இறுதியில் மொரீஷியஸிலும் தென் ஆப்பிரிக்காவிலும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் வாஷிங்டன், கலிஃபோர்னியா, மிச்சிகன், அரிசோனா, டெக்ஸாஸ் ஆகிய மாநிலங்களின் தலைநகர்களில் நிறுவப்பட்டன. 2005 மார்ச்சில் சிங்கப்பூரில் யுஎம்டீஎஸ் சேவை தொடங்கியது.

யுஎம்டீஎஸ், ஜிஎஸ்எம் நெட்ஒர்க்குகளோடு இயைந்து செயல்படக்கூடியது. ஆனால் ஜிஎஸ்எம் செல்பேசிக் கருவியை யுஎம்டீஎஸ் நெட்ஒர்க்கில் பயன்படுத்த முடியாது. யுஎம்டீஎஸ் செல்பேசி தனியாக வாங்க வேண்டும். யுஎம்டீஎஸ் செல்பேசியை ஜிஎஸ்எம் நெட்ஒர்க்கில் பயன்படுத்தலாம். ஒரு யுஎம்டீஎஸ் பயனர் பேசிக் கொண்டிருக்கும்போதே யுஎம்டீஎஸ் நெட்ஒர்க்கைக் கடந்து, ஜிஎஸ்எம் நெட்ஒர்க் பகுதியில் நுழைந்தால், அழைப்பு துண்டிக்கப்படாமல் ஜிஎஸ்எம்முக்கு மாற்றப்பட்டுவிடும்.

சிடிஎம்ஏ2000

ஐஎஸ்-95 (சிடிஎம்ஏ) தரப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, சிடிஎம்ஏ2000 தொழில்நுட்பம். சிடிஎம்ஏ, 2G தொழில்நுட்பம். அதன் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சியான சிடிஎம்ஏ2000, 3G தொழில்நுட்பம் ஆகும். ஐஎம்டீ-2000 வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டதால் டபிள்யூ-சிடிஎம்ஏ, யுஎம்டீஎஸ் தொழில்நுட்பத்தில் கிடைக்கின்ற அனைத்து சேவைகளையும் சிடிஎம்ஏ2000 நெட்ஒர்க்குகளும் வழங்கும். அதே வேளையில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள சிடிஎம்ஏ நெட்ஒர்க்குகளுடன் ஒத்தியைவாகவும் செயல்படும். சிடிஎம்ஏ நெட்ஒர்க்குகள் அதிகமாக உள்ள அமெரிக்காவில் இத்தொழில்நுட்பம் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது. சிடிஎம்ஏ2000 தரப்பாட்டினை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: (1) சிடிஎம்ஏ2000-1எக்ஸ் (2) சிடிஎம்ஏ2000-3எக்ஸ்.

சிடிஎம்ஏ2000-1எக்ஸ்

இது ஐஎஸ்-2000 தரப்பாடு என்றழைக்கப்படுகிறது. டீஐஏ (TIA – Telecommunications Industry Association) அமைப்பு இத்தரப்பாட்டினை வெளியிட்டது. சிடிஎம்ஏ வழங்குவதைவிட இருமடங்கு குரல் சேனல்களை வழங்கக் கூடியது. சராசரி டேட்டா பரிமாற்ற வீதம் 144 Kbps. சிடிஎம்ஏ நெட்ஒர்க்குடன் பின்னோக்கிய ஒத்திசைவு கொண்டது. சிடிஎம்ஏ பயன்படுத்தும் அதே சேனல் கேரியரை (1.25 MHz) பயன்படுத்துகிறது. எனவே 1x எனப் பெயர் பெற்றது. அதாவது 1.25-ஐ 1-ஆல் பெருக்க வேண்டும் என்று பொருள்.

சிடிஎம்ஏ2000-3எக்ஸ்

இது ஐஎஸ் - 2000ஏ தரப்பாடு எனப்படுகிறது. 1எக்ஸைவிட அதிகச் சேனல்களைக் கொண்டிருக்கும். டேட்டா பரிமாற்ற வீதம் 2 Mbps வரை இருக்கும். 1எக்ஸ் மற்றும் சிடிஎம்ஏ நெட்ஒர்க்குகளுடன் பின்னோக்கிய ஒத்திசைவு கொண்டது. 3எக்ஸ் இரண்டு வகையாகச் செயல்படுத்தப்படுகிறது. (1) மூன்று 1.25 MHZ கேரியர்களைப் பயன்படுத்தி 3G சேவைகளை வழங்குவது. (2) ஒரேயொரு 3.75 MHZ கேரியரைப் பயன்படுத்தி அதே சேவைகளை வழங்குவது. சேவையாளரின் தற்போதைய அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து எந்த வகை என்பது தீர்மானிக்கப்படும்.

சிடிஎம்ஏ2000 நெட்ஒர்க்குகள் அமெரிக்கா தவிர, ஜப்பானிலும் கொரியாவிலும் நிறுவப்பட்டுள்ளன. சிடிஎம்ஏ2000 தரப்பாடுகளை நிர்வகிப்பது 3ஜிபீபீ2 என்னும் அமைப்பாகும். யுஎம்டீஎஸ்ஸுக்குப் பொறுப்பாக விளங்குவது 3ஜிபீபீ அமைப்பாகும். இரண்டு அமைப்புகளும் வெவ்வேறானவை.

2G தொழில்நுட்பங்கள் பெருமளவு குரல் சேவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவையாக விளங்கின. 3G மற்றும் அதற்குப் பின்வந்த தொழில்நுட்பங்கள் பெருமளவு பல்லூடகம் சார்ந்த நிகழ்படச் சேவைகளை (multimedia based video services) முன்னிலைப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன.

3G-யிலிருந்து 4G-க்கு பரிணாம வளர்ச்சி காணுகின்ற இடைநிலைக் கட்டத்தில் முந்தைய தொழில்நுட்பங்களின் மேம்பட்ட வடிவமாகச் சில புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை வழங்கும் சேவைகள் தகவல் பரிமாற்ற வேகத்தின் அடிப்படையில் 3.5G எனவும், 3.75Gஎனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

3.5G: சிடிஎம்ஏ2000-1எக்ஸ்-ஈவிடிஓ

சிடிஎம்ஏ2000-1எக்ஸ் தரப்பாட்டின் மேம்பட்ட வடிவமான சிடிஎம்ஏ2000-1எக்ஸ்-ஈவிடிஓ (CDMA2000-1x-EVDO), 3.5G தலைமுறையைச் சார்ந்தது. EVDO என்பது Evolution Data Only என்பதன் சுருக்கம் ஆகும். Evolution Data Optimization என்றும் கூறப்படுவதுண்டு. 3.5G நெட்ஒர்க்குகளை நிறுவிய முதல் நாடு ஜப்பான். 2003 டிசம்பரிலேயே இந்த நெட்ஒர்க்குகள் தொடங்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தகவல் பரிமாற்ற வேகம் 3 Mbps வரை இருக்க முடியும். இப்போது 2.4 Mbps வரை எட்டியுள்ளனர். 2006-ஆம் ஆண்டில் 3 Mbps வேகத்தை எட்டத் தீர்மானித்துள்ளனர். இசைப் பாடல்களைப் பதிவிறக்கம் செய்வது ஈவிடிஓ நெட்ஒர்க்கின் செல்வாக்குப் பெற்ற சேவையாகும்.

3.75G: ‎ஹெச்எஸ்டிபீஏ (HSDPA) தொழில்நுட்பம்

டபிள்யூ-சிடிஎம்ஏ-யின் மேம்பட்ட வடிவமான ஹெச்எஸ்டிபீஏ (HSDPA - High Speed Downlinlk Packet Access) தொழில்நுட்பத்தை 3.5G அல்லது 3.75G பிரிவில் சேர்ப்பர். இதற்கு இணையான இன்னொரு தொழில்நுட்பம் ஹெச்எஸ்யுபீஏ (HSUPA - High Speed Uplink Packet Access) ஆகும். இந்த இரண்டையும் 4G-இல் சேர்ப்பவரும் உண்டு. ஹெச்எஸ்யுபீஏ-யின் பதிவேற்ற வேகம் 5.8 Mbps வரை இருக்க முடியும். இத்தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக வளர்த்தெடுக்கப்படவில்லை. 2007 அல்லது 2008-ஆம் ஆண்டில் இவை நடைமுறைக்கு வரலாம்.

 நான்காம் தலைமுறை (4G)

இன்றைய இன்டர்நெட்டுக்கு வித்திட்டது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் டார்ப்பா (DARPA – Defence Advanced Research Project Agency) என்பதை நாமறிவோம். அதே அமைப்பின் எண்ணத்தில் உருவானதே மொபைல் தொழில்நுட்பத்தின் 4G நெட்ஒர்க்குகள். 4G எங்கேயும் நடைமுறைக்கு வரவில்லை. இன்னும் கருத்தளவிலேதான் உள்ளது. எனினும் 4G கனவை நனவாக்க பல்வேறு நாட்டு அரசுகளும் பல்வேறு நிறுவனங்களின் ஆய்வுத் துறைகளும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

4G-யின் பண்புக் கூறுகள்

4G நெட்ஒர்க்கில் தகவல் பரிமாற்ற வேகம், நிலையாக இருக்கும்போது 100 Mbps வரை இருக்கும். பயணிக்கும்போது சராசரி வேகம் 20 Mbps. 3G வேகத்தைவிட 10 முதல் 50 மடங்கு அதிகம். இன்றைய அகல்கற்றை (Broadband) தொழில்நுட்பமான ஏடிஎஸ்எல் (ADSL-Asymmetric Digital Subscriber Line) இணைப்பின் வேகத்தைக் காட்டிலும் 10 முதல் 20 மடங்கு அதிகம்.

• செயல்படும் அலைவரிசை 2 GHZ முதல் 10 GHZ வரை.

• பயன்படுத்தப்படும் இணைய நெறிமுறை (Internet Protocol) - ஐபீவி6 (IPv6)

• பயனர்கள் வயர்லெஸ் அகல்கற்றை இணைப்பு மூலம் உயர்தர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமது செல்பேசியில் கண்டு களிக்க முடியும்.

• இணையத்தை அடிப்படையாகக் கொண்ட பல்தட கேட்பு நிகழ்படம் (Multi Channel Video On Demand) சாத்தியமானதாகும்.

• உலகம் முழுவதிலுமுள்ள அனைத்துவகை வயர்லெஸ் மற்றும் மொபைல் நெட்ஒர்க்குகளிடையே ரோமிங் சாத்தியம்.

• இன்றைக்கு இருப்பதைவிட, மலிவான கட்டணத்தில் அதிக அளவு டேட்டாவை அதிவேகமாகப் பரிமாறிக் கொள்ள முடியும். 10 MB கோப்பினை ஒரு விநாடியில் பதிவிறக்கலாம். (3G-யில் 100 விநாடி ஆகும்). பயனர்கள் தங்களது மிகுதெளிவு செல்பேசித் திரையில் மெய்நிகர் நடப்பு (Virtual Reality) அனுபவத்தைப் பெற முடியும்.

4G எப்படிச் செயல்படுகிறது?

4G நெட்ஒர்க், ஏற்கெனவே உள்ள வயர்லெஸ் லேன், புளூடூத் மற்றும் ஜிபீஆர்எஸ் போன்ற அனைத்து வயர்லெஸ் தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பங்களும் இணைந்த, ஒற்றை நெட்ஒர்க்காக இருக்கும். தடையில்லாத, இடையூறில்லாத, இணைப்புத் துண்டிப்பு இல்லாத ரோமிங் சாத்தியம். பயணிக்கும்போது ஒரு செல்லிலிருந்து வேறுபட்ட தொழில்நுட்பம் சார்ந்த இன்னொரு செல்லுக்குள் நுழைய நேர்ந்தாலும் இணைப்புத் துண்டிக்கப்படாது. செல்பேசி தானாகவே தகவமைத்துக் கொள்ளும். ஒற்றைச் செல்பேசி சாதனம் மூலம் வேறுபட்ட சேவைகளைச் செல்லுமிடமெல்லாம் பெறமுடியும். இதன்காரணமாக, 4G தொழில்நுட்பம் ''எந்த நேரமும், எங்கேயும், எந்த சேவையும்'' (Anytime, Anywhere, Anyservice) வழங்கும் தொழில்நுட்பம் என வர்ணிக்கப்படுகிறது.

4G நெட்ஒர்க்கில், எந்தவொரு செல்பேசியும் தகவல் அனுப்பும்/பெறும் கருவியாகச் செயல்படுவதோடு மட்டுமின்றி, நெட்ஒர்க் கட்டமைப்பின் ஓர் அங்கமான ரூட்டராகவும், ரிப்பீட்டராகவும் செயல்படும். அனைத்துப் பயனர்களும் தங்களுக்குப் பயன்படும் ஒரு தகவல் பரிமாற்றக் கருவியை எடுத்துச் செல்வதுடன், நெட்ஒர்க்குக்குப் பயன்படும் ரூட்டர் போன்ற ஒரு சாதனத்தையும் தம்முடன் எடுத்துச் செல்கின்றனர் என்று பொருள். எங்கெல்லாம் பயனர்கள் குவிந்திருக்கின்றனரோ அங்கெல்லாம் கூடுதலான தகவல் போக்குவரத்துப் பாதைகள் (routes) ஏற்படுத்தப்படுகின்றன. காரணம் ஒவ்வொரு செல்பேசியும் ஒரு ரூட்டராகச் செயல்படுகிறது.

3G வரையுள்ள தொழில்நுட்பங்களில் பயனர் கூட்டம் அதிகம் எனில் நெட்ஒர்க் தகவல் போக்குவரத்து, நெரிசல் ஏற்பட்டு அழைப்பு இழப்புகள் அதிகரிக்கும்). இவ்வாறு கூடுதலான பாதைகள் ஏற்படுத்தப்படுவதால், தகவல் பரிமாற்றம் எப்போதும் நெரிசல் குறைந்த பாதையிலேயே நிகழ ஏதுவாகிறது. இது இயங்குநிலையில், தானாகவே (dynamically and automatically) நிகழ்கிறது.

3G நெட்ஒர்க்குகளில், செல்பேசிச் சேவையாளர்கள், பயனர்களுக்குச் சலுகை விலையில் செல்பேசிக் கருவிகளைத் தந்து அவர்களின் செலவை ஈடுகட்டுகின்றனர். ஆனால், பயனர்களின் செல்பேசிக் கருவிகளே நெட்ஒர்க்கின் ரூட்டர்களாகச் செயல்படும் 4G நெட்ஒர்க்கில், பயனர்கள், செல்பேசிச் சேவையாளர்களின் நெட்ஒர்க்கைத் தாமே அமைத்து, அவர்களின் செலவை ஈடுகட்டுவர்.

இப்போதுள்ள செல்லுலர் நெட்ஒர்க்குகளில் பயனர்கள் நெட்ஒர்க் வளங்களை நுகர்பவர்களாகவே உள்ளனர். நெட்ஒர்க்குக்கு எந்த வகையிலும் துணைபுரிவதில்லை. ஆனால் 4G-யில், பயனர்கள் நெட்ஒர்க் வளங்களைப் பறித்துக் கொள்பவர்களாக இல்லாமல், நெட்ஒர்க்குக்கு வளம் சேர்ப்பவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாய், பயனர்களின் எண்ணிக்கை அதிகமாக, அதிகமாக கூடுதல் செலவின்றியே சேவையின் தரம் கூடிக்கொண்டே போகும்.

இப்போதுள்ள செல்லுலர் நெட்ஒர்க்குகளுக்கு கோபுரங்கள் நிறுவி, தொடர்பகங்கள் நிறுவி அகக்கட்டமைப்பை உருவாக்குவதற்கு 80% செலவாகிறது. தொழில்நுட்பத்துக்கென ஆகும் செலவு 20% மட்டுமே. ஆனால் 4G நெட்ஒர்க்கில் 80% தொழில்நுட்பத்துக்கென செலவாகும். அகக்கட்டமைப்புக்கு 20% மட்டுமே செலவாகும். எனவே கட்டணங்கள் நான்கில் ஒருபங்கே இருக்கும். சேவைநுட்ப வசதிகள் நான்கு மடங்கு அதிகரிக்கும்.

4G-யின் பயன்பாடுகள்

இப்போது கனவு நெட்ஒர்க்காகத் தோன்றும் 4G-ஐ நடைமுறைப்படுத்தும்போது, மெய்ப்பட இருக்கும் பயன்பாடுகள் எண்ணற்றவை. அவற்றுள் சில:

• இன்றைக்குப் பல நாடுகள் சிபிஎன் (CBN – Chemical, Biological, Nuclear) தாக்குதலுக்கு அஞ்சி வாழ்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அனைத்து அரசு வாகனங்களிலும், பஸ், ரயில், விமானம் போன்ற போக்குவரத்து வாகனங்களிலும் சிபிஎன் எச்சரிக்கை உணரிகளைப் (CBN Warning Sensors) பொருத்தி, எச்சரிக்கைத் தகவல், கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக எட்டுவதற்கும் அந்த வாகனம் இப்போது எந்த இடத்தில் (Geo-Location) இருக்கிறது என்பதை அறியவும் 4G நெட்ஒர்க்குகள் உதவும்.

• இப்போது, பெருநகரங்களில் போக்குவரத்து சிக்னல்களில் கேமரா பொருத்தப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படுகிறது. இவை ஒளியிழைக் கேபிள்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படுகின்றன. ஆனால் 4G நெட்ஒர்க்கில் வயர்லெஸ் கேமராக்களைப் பொருத்த முடியும். ஒவ்வொரு கேமராவும் ரூட்டராகச் செயல்பட முடியும் என்பதால் நெட்ஒர்க்கின் வியாபகம் மிகப் பரந்ததாக இருக்கும். வாகனங்களில் உள்ள உணரிகளை (Sensors) இந்தக் கேமரா நெட்ஒர்க்குடன் இணைத்துப் பயன்பெற முடியும்.

• போக்குவரத்துக் கண்காணிப்புக் கேமராக்கள் இப்போது ஒருவழித் தகவல் முறையிலேயே செயல்படுகின்றன. 4G நெட்ஒர்க்கில் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கேமரா/சென்சார்களுக்குத் தகவல் அனுப்ப முடியும். இதன்மூலம், ஆங்காங்கே சாலையில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, நகரத்தின் சாலைகளிலுள்ள போக்குவரத்து நெரிசலைக் கேட்டு அறிந்து நெரிசல் குறைந்த பாதையில் பயணிக்க முடியும். ஜிஐஎஸ் (G1S – Geographical Information System) மற்றும் ஜிபீஎஸ் (GPS- Global Positioning System) ஆகிய இரண்டும் இணைந்து 4G-யில் செயல்பட முடியும்.

• இப்போதுள்ள தொலை-மருத்துவம் (Tele-Medicine) 4G நெட்ஒர்க்கில் மேம்படும். போக்குவரத்து விபத்தில் எங்கோ ஓரிடத்தில் பாதிக்கப்படும் ஒருவருக்குச் சரியான நேரத்தில் சரியான மருத்துவம் அளிக்க, தொலைவில் இருக்கும் மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனை வழங்க முடியும்.

• சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவின்போது, கேபிள்களால் அமைக்கப்பட்ட தகவல்தொடர்பு நெட்ஒர்க்குகளை மீட்டமைக்க அதிக முயற்சியும் அதிக காலமும் தேவைப்படும். ஆனால் 4G நெட்ஒர்க்கினை மிகக் குறுகிய காலத்தில் மீட்டமைத்து தகவல் தொடர்பினை சரிசெய்துவிட முடியும்.

4G திட்டப்பணிகள்

• 4G நெட்ஒர்க் உருவாக்கத்தில் பலநாட்டு அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றன. கருத்தளவில் இருக்கும் 4G நெட்ஒர்க் காலப்போக்கில் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்பது நடைமுறை சாத்தியமே.

• அல்கேட்டல், நார்ட்டல், மோட்டோரோலா போன்ற செல்லுலர் தொலைபேசி நிறுவனங்களும் ஹெச்பீ, ஹியூஜெஸ், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் போன்ற ஐடீ நிறுவனங்களும் 4G நெட்ஒர்க் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளன.

• ஜப்பான், சீனா, கொரியா ஆகிய நாடுகள் சேர்ந்து, ஒருங்கிணைந்த தகவல்தொடர்பு புரொட்டாக்காலை உருவாக்க முடிவெடுத்துள்ளன.

• 4G நெட்ஒர்க்கை இந்தியாவில் அமைத்திட இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது. '3G செலவு மிக்கதாய் உள்ளது; இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத் திறனும், மிகப்பரந்த சந்தையும் 4G-க்குச் சாதகமாக உள்ளன' என இந்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஐடீ அமைச்சகம் அறிவித்துள்ளது.

• 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 4G நெட்ஒர்க்கைப் பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. பார்வையாளர்கள் போட்டி நடைபெறும் இடங்களையும், போட்டி நாள்/நேரத்தையும், போட்டி முடிவுகளையும், போக்குவரத்து நிலைமைகளையும் நிகழ்நேரத்தில் உடனுக்குடன் அறிய நகரெங்கும் வயர்லெஸ் மொபைல் ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்படும். அதுமட்டுமின்றி அவர்கள் தங்குமிடம், பேருந்து, கார், ரயில், சாலை, சுரங்கப்பாதை எங்கிருந்து கொண்டும் இணையத்தை அணுகுவதற்கு வசதி செய்து தரப்படும்.

 

Comments

Popular posts from this blog

Garbage Collection Monitoring Using QR Code-Based Mobile Application Tracing the Garbage Collection Vehicles

  Abstract This paper presents a system for monitoring garbage collection using a mobile application that tracks garbage collection vehicles through QR codes. The system aims to improve waste management efficiency by providing real-time information on vehicle locations and collection routes. We describe the design and implementation of the mobile application, QR code generation and scanning, and the backend system for data processing and analysis. Results show that the system can effectively track garbage collection vehicles and provide useful insights for optimizing collection routes and schedules. Introduction Efficient garbage collection is crucial for maintaining clean and healthy urban environments. However, many cities struggle with inefficient waste management systems due to poor tracking and monitoring of collection vehicles. This paper proposes a solution using QR codes and a mobile application to track and monitor garbage collection vehicles in real-time. Methodology The ...

10 Best Apps to Block Spam Calls on Android Phone and Safeguard Your Privacy

In an era where privacy concerns are paramount, safeguarding your digital life is crucial. Among the myriad of interruptions in our daily lives, spam calls emerge as a significant nuisance. Android users, however, have a slew of options at their disposal to mitigate this issue. This blog post delves into the 10 best apps designed to block spam calls on Android devices, ensuring that your privacy remains intact. Phone by Google The Phone by Google app, a staple on many new Android smartphones, is acclaimed for its user-friendly interface and robust call-blocking features. The app’s ability to identify calls coupled with manual blocking capabilities provides a solid defense against unwanted callers. The integration of Google Assistant for automatically screening calls further enhances its utility, making it a top contender for safeguarding your privacy. Call Blocker- Blacklist Call Blocker – Blacklist stands out for its precise spam identification and blocking capabilities. Its clean int...

Exam are for evaluation don't create coagulation in the system

Education is a common term which should reach every students in the nation. If there are opportunities for pursuing medical on interest of individuals, then public organization should support for the common individuals. When state decides a formulation for evaluating the interests of medical aspirant why and what is the need of another exam required to mandate for medical aspirants. When the education system has to equalize the opportunities for medical aspirants, then a system has to take initiative to match  the performance of individuals from various state and frame a eligibility for medical admits. Mandating an exam not only for medical entries, even for other discipline admits is not contributing to the efforts and work of framing syllabus and evaluation of state government. Even though,  the public have the reason for encouraging NEET examination for common medical aspirant students, they can't mandate an exam for medical admits.  This creates mess and confusion a...